மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு ஜனநாயகப் போராட்டத்துக்கு அழைப்பு.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகின்றோம். ஆகவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதி வேண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் அனைத்து உறவுகளையும் அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.