இலங்கையில் இருந்து 6.6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த இருவர் கைது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இலங்கையில் இருந்து நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

காரில் வந்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் காரை சோதனை செய்தபோது அதில் 6.6 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரையைச் சேர்ந்த சேகுசாதிக் சாதிக் அலி ஆகியோரைக் கைது செய்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஏறத்தாழ ரூ.4.56 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

யாருக்காக அவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.