கோயில் கொடை விழாவில் தகராறு: அண்ணன், தம்பி குத்திக் கொலை.

திருநெல்வேலி: திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராற்றில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே, காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமித் திருக்கோயில் கொடை விழா ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு நடைபெற்றது.

இதில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.

அந்நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்த இளையர் மற்றொரு பிரிவைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரையும் கத்தியால் குத்தினார். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

படுகாயமடைந்த மற்றோர் இளையர் மகேஷ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.