5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை

திருச்சியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற இளைஞருக்கு கால் முறிந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

திருச்சியில் தாய் இறந்து தந்தை கைவிட்டதால், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சிறுமி, அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி சென்ற அச்சிறுமியை காணவில்லை என்று அவரது பாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.சனிக்கிழமை காலை, காயத்துடன் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமி காவலர்களால் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, இளைஞர் ஒருவரால் கடத்தப்பட்டு இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த 23 வயதான சின்னராஜா என்பவர் 5 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. மேலும், சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, பைக்கில் அழைத்து சென்று கொள்ளிடம் ரயில்வே பாலத்தின் கீழ், இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்தது கொடூரமும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சிதம்பரத்தில் பதுங்கி இருந்த சின்னராஜாவை காவலர்கள் கைது செய்தனர். அப்போது, காவலர்களிடம் இருந்து சின்னராஜா தப்பிச்செல்ல முயன்றதாகவும், அதனால் தடுமாறி விழுந்த போது, அவரது காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், காலில் மாவு கட்டுப்போடப்பட்டு, சின்னராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 5 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.