சகல தமிழ்த் தேச அரச உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் – கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்களும் வாக்களிக்காது முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக நாங்கள் விடுக்கின்றோம் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.

“இது வெறுமனே தமிழ் மக்களின் நலன்களுக்கானது மாத்திரமல்ல. மாறாக ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களினதும் நலன்களுக்கானது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் ஒற்றையாட்சி அரசமைப்பை நீக்குவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தவும் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவரவும் முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக இருக்கின்றோம்.” – என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்து பிரதான வேட்பாளர்கள் மிகத் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நானும் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்த நாளிலிருந்து 75 வருடங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த அவையிலுள்ள மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். எனினும், யாரும் இதனைக் கருத்திலெடுக்கவில்லை.

இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆட்சியிலிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அவரது அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினார்கள். அதன் விளைவாக அவர் ஜனாதிபதிப் பதவியை விட்டு வெளியேறினார். இதன்பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை நோக்கி தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

குறிப்பாக எங்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகவும் நீங்கள் அரைவாசித் தூரம் ஒத்துழைத்தால் கூட இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதாகக் கூறியிருந்தார். அதேநேரம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாகவிருந்தால் 75 வருடங்களாகத் தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்து ஒரு இன அழிப்பு யுத்தத்துக்கு வித்திட்ட இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பு ஊழலுக்குக் காரணமாகவிருந்த ஒற்றையாட்சி அரசமைப்பு யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் இந்த நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்குள் விழுவதற்குக் காரணமாகவிருந்த ஒற்றையாட்சி அரசமைப்பு ஒரு தோல்வியடைந்த அரசமைப்பு. இந்த அரசமைப்பை நீக்கி ஒரு சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வர வேண்டும். தமிழ் மக்களின் தேசத்தை அங்கீகரிக்கும் வகையிலும், இனங்களைச் சமத்துவமாக வழிநடத்தக் கூடிய வகையிலும் ஒரு சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவருவதன் மூலம்தான் இனங்களுக்கிடையில் ஒரு சமத்துவத்தையும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய முதல் அடியை எடுத்து வைக்க முடியுமென்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். சமஷ்டி அரசமைப்பு அடிப்படையில் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்துப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் எப்போதும்
ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்ற தெளிவான செய்தியை எங்கள் கட்சித் தலைவர் முன்வைத்திருந்தார்.

ஆனாலும், அதற்குப் பின்னர் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் பல கூட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி அதன் மூலமாகத்தான் எல்லா இனச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு தலைவர் என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்திடமிருந்து, குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் மாத்திரம்தான் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அவர் எடுத்திருக்கவில்லை. இந்நிலையில் வடக்கு- கிழக்கில் சிங்கள மயமாக்கல் மற்றும் பெளத்த மயமாக்கலைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலும் ரணில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

அதேவேளை தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியவர்களிடமும் ஒற்றையாட்சி அரசமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். சமஷ்டி அரசமைப்புக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைத்திருந்த போதிலும் எங்கள் கோரிக்கைகளை எவரும் உள்வாங்கியதாக இல்லை.

இந்தநிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே கஜேந்திரகுமார் தலைமையிலான எங்கள் கட்சி இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பு ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்புக் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை வெளிப்படுத்தும் வரையும், தமிழினம் மீதான இன அழிப்புக்கும், தொடர்ச்சியான கட்டமைப்புச் சார் இன அழிப்புக்கும் காரணமாகவும் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்ற முடிவை நாங்கள் எடுத்திருந்தோம். முன்கூட்டியே இவ்வாறான முடிவை நாங்கள் எடுத்திருந்தமையால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி அரசமைப்பு முறையை நீக்கிச் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென நாம் எதிர்பார்த்திருந்தோம். அந்த அழுத்தங்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தோம். மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்ற செயற்பாடுகளையும் தீவிரமாக முன்னெடுத்திருந்தோம்.

ஆனாலும் கடந்த மாதம்-29 ஆம் திகதி பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பது போல 75 வருட காலமாக இந்த நாட்டின் தோல்விக்குக் காரணமான அதே ஒற்றையாட்சி அரசமைப்பையும் அதே பெளத்த மதம் அரச மதம் என்பதையும் பேணிப் பாதுகாக்கும் நிலைப்பாடுகளுடன் தான் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்திருக்கின்றன.

எமது கோரிக்கைகள் மூன்று பிரதான வேட்பாளர்களாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் மட்டத்தில் கருத்துருவாக்கங்களை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம். நாளை (இன்று) புதன்கிழமை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒட்டுமோத்த தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.