ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெல்ல வேண்டும் – அவரிடம் நேரில் மாவை தெரிவிப்பு.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கு மாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர் தெல்லிப்பழையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது இல்லத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என்று அவரிடம் நான் சுட்டிக்காட்டினேன்.

மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.