காணி உரிமையையும் வீட்டு உரிமையையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன் – பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி.

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டு உரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஹப்புத்தளையில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

”இந்தப் பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று குறைபாடுகள் இல்லாத ஹப்புத்தளை தேர்தல் தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இராணுவ நிகழ்ச்சி ஒன்றுக்காக இங்கு பிரதமராக வந்தபோது அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் நீண்டு கிடந்தன. தொழில் இன்றி மக்கள் அல்லல்பட்டனர். வீடுகளில் முடங்கினோம். எதிர்காலம் கேள்விக்குறியாகத் தெரிந்தது. இவற்றை நிவர்த்திக்க மக்களுக்காக அரசை ஏற்றுக்கொண்டேன்.

அதன் பின்னர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் நிபந்தனைகளுக்கு அமைய எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் முன்கூட்டியே அறிந்திருந்தேன். அவர்கள் மேலும் இலங்கைக்குக் கடன் தரவும் தயாராக இருக்கவில்லை.

கடன் பெறவோ, பணம் அச்சிடவோ முடியாது என்று வலியுறுத்தினர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருந்தனர். அரசிடம் பணம் இருக்கவில்லை. இறுதியாக வேறு வழியின்றி வரியை அதிகரிக்கும் கடினமாக முடிவை எடுத்தோம். வருமான வரியையும் அதிகரித்தோம். ரூபாவின் பெறுமதி இரட்டிப்பாக அதிகரித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை.

அதற்கு மத்தியிலேயே கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அதன் பயனாக நாட்டின் வருமானம் அதிகரித்தது. டொலரின் பெறுமதி குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாகக் குறைந்தன. ஆனால், மக்கள் கஷ்டம் முற்றாகக் குறையவில்லை. எனினும், எமது வருமானம் அதிகரிக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மக்களிடம் ஓரளவு பணம் இருந்தது.

அதனை யாருக்கும் பகிரலாம் என்று சிந்தித்தேன். அதன்படியே குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ‘அஸ்வெசும’ வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தினோம். லயன் அறைகளில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும். எனவே, இவ்வருடத்தில் மேலும் வருமானம் அதிகரிக்கும். தோட்டத் தொழிலாளர் சம்பளமும் அதிகரிக்கும்.

அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கும். அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும். ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி விலைகளைக் குறைத்து நிவாரணம் வழங்குவோம்.

நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது வௌிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் – வாங்கல் செய்ய முடியும். ஐ.எம்.எப்பிடமிருந்து நிவாரணங்கள் கிடைக்கின்றன. கடன் வழங்கிய நாடுகள் மீள் செலுத்த சலுகைக் காலத்தை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றி முன்னோக்கிச் சென்றால் எமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.

எனவே, எனது எதிர்காலத்தை விடுத்து உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானியுங்கள். அநுரவும் சஜித்தும் இவற்றை மாற்றுவதாகக் கூறுகின்றார்கள். அதனால் நெருக்கடிகள் மீண்டும் தலையெடுக்கும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதே இப்போதைய தேவையாகும். அதனால் தன்நிறைவான வருமானத்தை ஈட்ட வேண்டும். பழைய முறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். லயன் அறை முறைகளை முற்றாக ஒழித்துவிட்டு கிராமங்களாக மாற்றியமைப்போம். காணி உறுதிகளையும் மக்களுக்குத் தருகின்றோம். விரும்பியவாறு வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். அதனால் தோட்டங்கள் கிராமங்களாக பரிணமிக்கும்.

மரக்கறி மற்றும் பழ உற்பத்திக்கும் தேவையான வசதிகளை மேம்படுத்தித் தருவோம். அதனால் உள்நாட்டு, ஏற்றுமதி உற்பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சுற்றுலாத்துறையையும் இங்கு பலப்படுத்த வேண்டும். அதனால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம். டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவோம். பெண்களையும் கைவிடவில்லை. அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பெண்கள் சிறுவர் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவோம். பெண்களைத் தொழில் சந்தைக்குள் உள்வாங்குவோம். சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை அமைத்துத் தருவோம்.

இவற்றுக்காகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கின்றேன்.ஹப்புத்தளை மற்றும் தியதலாவ போன்ற நகரங்களின் அபிவிருத்திக்கு வழிசெய்வேன். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, கிராமங்களும் இருக்காது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.