துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு 3 வயது குழந்தை படுகொலை.

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடிய நிலையில், துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து அவன் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பில், தங்கம்மாள் என்ற பெண்ணைக் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 36. இவரது மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய், அங்குள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவந்தான்.

இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள், 49. இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்ட சிறு சிறு தகராறுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை தங்களது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சஞசய்யை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்காக பெற்றோர் தேடியபோது அவனைக் காணவில்லை.

இதையடுத்து, விக்னேஷ் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், ஆத்துக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சல்லடைப்போட்டு காவலர்கள் தேடினர்.

தங்கம்மாள் வீட்டிற்குள் காவலர்கள் நுழைந்தபோது, தனது வீட்டின் பின்புறமாக அவர் தப்பி ஓடினார்.

உடனடியாக அவரைத் துடித்திப் பிடித்த காவலர்களிடம், குழந்தையைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், துணி துவைக்கும் இயந்திரத்தில் சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சஞ்சய்யை பிணமாக மீட்டனர்.

அவனது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

காவலர்களின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது.

மகனின் துக்க நிகழ்வுக்கு விக்னேஷ் குடும்பத்தினர் வராததால் தனது மகன் இறப்புக்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்ததே காரணம் என்றும் இதனால் அவரது குடும்பத்தினரை பழிவாங்க தங்கம்மாள் காத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்த சஞ்சய்யைப் பார்த்த தங்கம்மாள், அவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு சாக்குப் பையில் கட்டி துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு மூடிவிட்டார். இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்தப் படுகொலை தொடர்பில் தங்கம்மாளைக் காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.