நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குக! – குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே ஆட்சி அதிகாரத்துக்கு உகந்தது என்று தெரிவித்துள்ள குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில் அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டைப் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில், இன்று 116 ஆவது தேசிய சிறைக் கைதிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய இட வசதியைக் கொண்ட சிறைக்கூடங்களுக்குள் 24 ஆயிரம் கைதிகளை திணித்து அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலையே சிறைத்துறை இந்தக் கைதிகள் தின நிகழ்வை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இருப்பினும் உணவு, நீர், சுகாதாரம், மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் போதுமற்ற நிலையில் பெயருக்காகக் கொண்டாடப்படுகின்றதா இந்தத் தேசிய சிறைக் கைதிகள் தினம்? என்கின்ற கேள்வி எழுகின்றது.

இத்தனை மோசமான கட்டமைப்பைக் கொண்டியங்கும் சிறைக்குள்ளேயே சமூகத்தை நேசித்த எமது தமிழ் அரசியல் கைதிகள், 30 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை கொடூரமானது?

“எமது நாடு, ஜனநாயக நாடு. நாம் கருணை அன்பு மிக்கதொரு பாரம்பரிய சமூக சமயத்தைச் சார்ந்தவர்கள். மறப்போம் மன்னிப்போம் என்பது எமது கொள்கையில் ஒரு அங்கம்.” – என்று மேடை முழக்கம் செய்கின்ற அரசும் அதன் அதிகாரமும்தான் எமது தமிழ் அரசியல் கைதிகளைப் பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைக்குள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றதா? எனக் கேட்கின்றோம்.

இன்று, தேர்தல் பரப்புரைகளாலும் எண்ணற்ற வாக்குறுதிகளாலும், நாடு நிரம்பித் ததும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனபோதிலும், தமிழினத்தின் பெயரில் மூன்று தசாப்த காலங்களாக சிறையில் கொடுமை அனுபவித்து வரும் எமது தமிழ் அரசியல் கைதிகளின் நரக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியின் எல்லை இதுவரை தெரியவில்லை.

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டினுடைய சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறையும் அதற்கு ஒப்ப இயங்குகின்ற சிறைத்துறையும் அரச இயந்திரத்தின் முக்கிய இரு பிரிவுகளாகும்.

இவைகள், குற்றம் காணும் குடிமக்களைச் சீர்திருத்தி, குறிப்பிட்டதொரு காலத்துக்குள் மீண்டும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொறுப்புக்குரிய நிறுவனங்களாகும்.

ஆனாலும், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயத்திலே அரசும் அதன் இயந்திரங்களும் மாற்றான் தாய் மனப்போக்குடன் நடந்து கொள்வதன் நோக்கம் என்ன?

காலம் காலமாக கதிரையேறும் சிங்கள ஆட்சி அதிகாரங்கள், தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சூறையாடும் கலாச்சாரத்துக்கு இனிமேலாவது முற்றுப்புள்ளியிட வேண்டும். மக்களினதும் சர்வதேசத்தினதும் பார்வைக் கோணங்களை திசை மாற்றும் கைங்கரியத்தைக் கைவிட வேண்டும்.

நிச்சயமாக இதற்கு மேலும், கால வீணடிப்புச் செய்யாது தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய அவசர அடிப்படை விடயங்களுக்கு தீர்வினைக் கூற வேண்டும்.

குறிப்பாக, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில், அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டைப் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்பதைக் ‘குரலற்றவர்களின் குரல்’ மனிதநேய அமைப்பினராகிய நாம், இந்த ஆண்டு தேசிய சிறைக் கைதிகள் தினப் பகிரங்கக் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

அவ்வாறில்லையேல், இந்த நாட்டினுடைய ஆட்சி அதிகாரங்களுக்கும் அதற்குத் துணை செய்யும் குடி மக்களுக்கும் தமிழினத்தின் சாபக் கேடு என்பது தவிர்த்தொதுக்க முடியாத ஒரு காலத்தின் நியதியாகும் என்பதை நினைவூட்டக் கடமைப்படுகின்றோம்.” – என்றுள்ளது.
DOC090524-09052024103100

Leave A Reply

Your email address will not be published.