மன்னாரில் சார்ள்ஸ் எம்.பியை வீடு தேடிச் சென்று சந்தித்த ரணில் – தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவிப்பு.

மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் – தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் வரவேற்றார். இருவரும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காகத் தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் வினவியபோது, “இது ஜனாதிபதியுடன் ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு. ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு. மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நானும் நிற்பேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.