சென்னையில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் மீட்பு!

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணின் உடல் சூட்கேஸில் இருந்து வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் வசித்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூட்கேஸில் உடல்

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் சாலையில் கிடந்த சூட்கேஸில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்ததில், ஒரு பெண்ணின் உடல் துண்டுதுண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஒருவர் கைது

குமரன் குடில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்த காவல்துறையினர் சூட்கேஸை வைத்து சென்றவரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சூட்கேஸ் கிடந்த பகுதியில் வசித்து வந்த மணி என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

பெண் யார்?

மாதாவரம் பகுதியில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு காணாமல் போன தீபா என்ற பெண்ணை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலைக்கான காரணம், எப்படி கொலை செய்யப்பட்டார் உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அதிகளவிலான ஐ.டி. ஊழியர்கள் வசிக்கும் துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் சூட்கேஸில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.