லெபனானில் அலைப்பேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, 450க்கும் மேற்பட்டோர் காயம்.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைப்பேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.

லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய அலைப்பேசிகள் வெடித்துச் சிதறியதாகச் செய்திகள் வெளியாகின.

மாண்ட ஹிஸ்புல்லா போராளிகளுக்கான இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது அலைப்பேசிகள் வெடித்ததாகவும் அதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மக்கள் தலைதெறிக்க ஓடுவதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்பட்டன.

அலைப்பேசிகள் வெடித்ததில் பலருக்குக் கண்களிலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெய்ரூட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறினர்.

சிலர் பார்வை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெடிப்பின் காரணமாகச் சிலர் கை விரல்களை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 17ஆம் தேதியன்று, ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய அகவிகள் (பேஜர்) வெடித்துச் சிதறியதில் 12 பேர் மாண்டனர்.

மாண்டோரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

அகவிகள் வெடித்ததில் லெபனானெங்கும் பல பகுதிகளில் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் காரணம் என்று ஹிஸ்புல்லா கூறுகிறது.

செப்டம்பர் 17ஆம் தேதியன்று அகவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்தது.

இந்நிலையில், அடுத்த நாளே மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து இஸ்‌ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே,. லெபனானில் வெடித்துச் சிதறிய அலைப்பேசி வகையை உற்பத்தி செய்வதை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டதாக ஜப்பானைச் சேர்ந்த ஐகாம் நிறுவனம் செப்டம்பர் 19ஆம் தேதியன்று தெரிவித்தது.

“ஐசி-வி82 ரக அலைப்பேசிகள் 2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் தேதி அக்டோபர் மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்டு மத்தியக் கிழக்கு போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டோம். அந்த அலைப்பேசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை,” என்று ஐகாம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.