இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை.

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில் கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் பங்கேற்றார்.

மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

“கூகல் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனப் பிரதமர் மோடி ஊக்கம் அளித்தார். எங்களது ‘பிக்சல்’ திறன்பேசிகள் இந்தியாவில்தான் இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது எங்களுக்குப் பெருமை தருகிறது,” என்றார் சுந்தர் பிச்சை.

“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்திய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் இந்தியாவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் பிரதமர் மோடி விரும்புகிறார். அந்த வகையில் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு எங்களை அவர் கேட்டுக்கொண்டார்,” என சுந்தர் பிச்சை கூறினார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அதோடு, அந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு அதிகப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் மோடி உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதை எண்ணி பெருமை கொள்கிறோம். ஏற்கெனவே எங்களது நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றன. நாங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளோம்,” எனத் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.