காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம்! (Video)

கடந்த அரசாங்கங்கள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

கோல் ஃபேஸ் பகுதி உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்வதில் பொதுமக்களின் பணத்தை வீண் விரயம் செய்வதே இந்த இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள வாகன தரிப்பிட வசதிகள் அந்த வாகனங்களை நிறுத்த போதுமானதாக இல்லை என்பதால் காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்துவாரம் உட்பட பல இடங்களில் 107 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவை கடந்த அரசாங்கத்தினால் பல்வேறு பதவிகளில் இருந்த தமது நண்பர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நாட்டு மக்கள் அன்றாடம் வாழ முடியாத நிலையில் கடந்த 76 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பொதுச் செல்வங்களை வீணடித்து வருவது மிகவும் வேதனையான நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார நிலையத்தில் போதிய அம்பியூலன்ஸ்கள் இல்லாத நிலையிலும், அரச உத்தியோகத்தர்களுக்கு கடமைகளை நிறைவேற்ற போதிய வாகனங்கள் இல்லாத போதும் பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தமது நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாப்பது பொறுப்பாகும் எனவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முழுமையான மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 59 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக தனது நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர், வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 16 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.