பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! – முன்னாள் எம்.பி. மனோ சூளுரை.

“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களைச் செய்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத் தேத்தல் தொடர்பில் கூட்டணியாகக் கலந்துரையாடுவோம்.

நாங்கள் தனிக் கட்சி. தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். எங்கள் மக்கள் எங்களின் நிலைப்பாட்டை ஏற்று நடந்திருக்கின்றார்கள். அது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தெரியும்.

எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம். இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கின்றோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” – என்றார்.
………………

Leave A Reply

Your email address will not be published.