மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் சடலமாக மீட்பு – படுகொலை எனப் பொலிஸார் சந்தேகம்.

ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல் வீட்டார் சடலமாக மீட்கப்பட்டவரின் மகனிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சடலமாக மீட்கப்பட்டவரின் தாயும் மகனும் வீட்டின் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியைச் சோதித்துப் பார்த்தபோது சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயின் தாயும் மகனும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் எவரேனும் நபரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
………………

Leave A Reply

Your email address will not be published.