எட்டு ஆண்டுகளாக சிறாருக்கு பாலியல் கொடுமை: விடுதி காவலருக்கு மரண தண்டனை.

அருணாசலப் பிரதேசத்தில் பள்ளி விடுதியில் 15 சிறுமிகள் உள்பட 21 சிறாா்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய அந்தப் பள்ளியின் காவலருக்கு (warden) தூக்குத் தண்டனை விதித்து ‘போக்ஸோ’ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். பாலியல் குற்றங்கள் 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு எட்டு ஆண்டுகள் நீடித்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இரு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 2019 முதல் 2022 வரை காவலராக இருந்த யும்கென் பாக்ரா, இந்தி ஆசிரியா் மாா்பும் கோம்திா், முன்னாள் தலைமை ஆசிரியா் சிங்டன் யோா்பென் ஆகியோா் 21 சிறாா்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தினா்.

இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று சிறாரை அவா்கள் மிரட்டினா்.

பாதிக்கப்பட்ட இரு சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் பள்ளியில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவித்ததையடுத்து பிரச்சினை அம்பலமானது.

இதையடுத்து, தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினா் கைது செய்தனா்.

பின்னா், அவா்கள் பிணையில் வெளியே வந்தனா். ஆனால், கௌகாத்தி உயா் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து பிணையை ரத்து செய்தது. இந்நிலையில், போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தீா்ப்பளித்தது.

முக்கியக் குற்றவாளியான காவலர் யும்கென் பாக்ராவுக்கு தூக்கு தண்டனையும் இந்தி ஆசிரியா் மற்றும் முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.