சுமந்திரன் அணியினருடன் ஒருபோதும் சேரவே முடியாது! – தமிழரசின் அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கட்சி இப்படி பதில்.

“ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசியக் கட்சியின் முடிவு.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனப் புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கினறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாகச் செயற்பட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன.

இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது எதற்காக? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்து வைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்த காலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசியக் கட்சியின் முடிவு ஆகும்.

முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகப் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளது. அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாகத் தெரிவிப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.