புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை!

“புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகின்றேன்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவை விடுத்துள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளுடன் மக்களின் விருப்பத்துக்கமைய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

அன்று தொடக்கம் இன்று வரை என்னால் முடிந்தளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் என்னால் இயன்ற வரை வழங்கியும், மக்கள் போராட்டங்களிலும் பங்குபற்றியிருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தித் திட்டங்களையும் நான் முன்னெடுத்திருக்கின்றேன். தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவுக்கும் கௌரவத்துக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றேன்.

அதேநேரம் தமிழர்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதையும் உறுதியாகக் கூறுகின்றேன்.

எனக்குத் தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களுடன் நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.