8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை கடிதம் மூலம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஹனுமன்கர், உதய்பூர், ஆழ்வார் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாக ரயில்வே அதிகாரி சசி கிரண் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டலை தொடர்ந்து, ரயில் நிலையங்கள் சோதனை செய்யப்பட்டதில், புரளி எனத் தெரியவந்ததாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ரயில் நிலையங்களுக்கு வருகை தந்த சில ரயில்களையும் காவலர்கள் சோதனை செய்தனர்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி வந்த மிரட்டலை தொடர்ந்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் சோதனைக்கு உள்படுத்தப்படுவதுடன், மோப்ப நாய்கள் மூலமும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மிரட்டல்?

ஹனுமன்கர் ரயில் நிலையத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி முகமது சலீம் அன்சாரி என்ற பெயரில் அனுப்பப்பட்ட கடிததத்தில் ராஜஸ்தானை தவிர பிற இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் வருகின்ற அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.