ஓட்டு வேண்டுமென்றால் இந்த நீரை குடியுங்கள்.. கிராம மக்கள் அதிரடி

ஹரியாணா மாநில பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சமஸ்பூர் கிராமத்துக்கு ஓட்ட கேட்டு வந்த வேட்பாளருக்கு ஓட்டு வேண்டுமென்றால் இந்த நீரை குடியுங்கள் என கிராம மக்கள் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

சர்க்கி தாத்தி தொகுதிக்கு உள்பட்ட சமஸ்பூர் கிராமத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக, இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என வேட்பாளர்கள்தான் ஓட்டு கேட்டு பேசுவார்கள். ஆனால், இங்கு கட்சி பேதமின்றி, எந்த வேட்பாளர் வந்தாலும் முதலில் கிராம மக்கள்தான் பேசுகிறார்கள்.

அங்கு இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீரைப் பிடித்து இதைக் குடியுங்கள். உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்கிறார்கள். சபாஷ் சரியான சவால் என்று பலரும் இதனை பாராட்டி வருகிறார்கள்.

இந்த குடிநீர் என்பது ஏதோ பயங்கரமானது எல்லாம் இல்லை, தற்போது குடிநீர் என்ற பெயரில், அந்த கிராம மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர்தான்.

இந்த அசுத்தம் மற்றும் துர்நாற்றம் வீசும் தண்ணீரைத்தான் பல காலமாக குடிநீர் என்ற பெயரில் எங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது விலங்குகளுக்குக் கூட கொடுக்க முடியாது, ஆனால் பல காலமாக நாங்கள் குடித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில்தான், அக்டோபர் 5ஆம் தேதி, ஹரியாணா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஹரியாணாவில் மொத்தமாக 90 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில்தான், தங்கள் கிராமத்துக்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம், இந்த குடிநீரை குடித்தால் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று சவால் விடுத்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.