‘பார் பெர்மிட்’ பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை உடன் வெளியிடுங்கள் – ஜனாதிபதியிடம் சுமந்திரன் நேரில் கோரிக்கை.

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதிக்கும் முன்னாள் எம்.பி. சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரனின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்பதான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பின்னரான, புதிய அரசமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 – 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் வரைபை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இந்தச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் சுமந்திரன் வலியுறுத்தினார் .

மேலும், ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் முறைகேடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களைக் குறித்ததான சந்தேகத்தையும் ஏற்படுத்துவதனை அவர் சுட்டிக்காட்டியிருந்ததோடு உடனடியாக அந்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்பாடுவதாகவும், வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் தெரிவித்தார்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.