கிரிக்கெட் விளையாடிய மாணவன் பரிதாபச் சாவு – கொட்கலையில் சோகம்.

நுவரெலியா, கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி வீழ்ந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நஷீஸ் (வயது – 18) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய அவர், கால் தடுக்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டமொன்றில் சுவரில் மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.