ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்! – ஜனாதிபதி அநுர உறுதி.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.

இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும், அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்ல என்றும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு சாட்சிகளைத் திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாது என்றும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் மாற்றத்துக்காக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக்கணக்கில் அப்பாவி உயிர்களைப் பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும், அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்தபடியாக, 274 இற்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பறித்த மற்றும் பெருமளவானவர்களைக் காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்துக்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும், மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்து என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்துபோன 5 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வௌிப்படுத்தினர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துதி தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகளால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்குக் காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது நம்பிக்கை உள்ளது என்றும், அவரின் நேர்மையைப் பாராட்டுவதாகவும் தெரிவித்த கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதன்படி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.