ஆசிரியருக்கு கால்களைப் பிடித்துவிட்ட மாணவர்கள்; கொந்தளிக்கும் இணையவாசிகள் (Video)

பள்ளிக்கூடங்களில் நம் அறிவுக்கண்ணைத் திறந்துவைக்கும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்க, அதிர்ச்சியில் கண்களை அகல விரியவைக்கும் ஆசிரியர்கள் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

இணையத்தில் பரவலாக வலம்வரும் காணொளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று இணையவாசிகள் சாடி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்கிறார். அவரின் கால்கள் மீது நின்று மிதித்தவாறு பிடித்துவிடுகின்றனர் சில மாணவர்கள்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவர, அரசுப் பள்ளிகள் குறித்து பலரும் கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், ஆசிரியர்கள் பலர் தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கர்தார்பூரில் உள்ள அரசாங்க உயர் தொடக்கப்பள்ளியில் காணொளி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதில் ஆசிரியர் தரையில் படுத்திருக்க, அவரின் கால்களை மிதித்தவாறு பிடித்துவிடுகின்றனர் மாணவர்கள்.

இந்தக் காணொளியைத் தாம் பார்த்துள்ளதாக பள்ளி முதல்வர் அஞ்சு சௌத்ரி கூறியுள்ளார். ஆனால், இக்குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என்றார் அவர்.

காணொளியில் உள்ள ஆசிரியர் ஒருவேளை உடல்நலமில்லாமல் போயிருக்கலாம் என்றும் தம் கால்களைப் பிடித்துவிடுமாறு சிறுவர்களிடம் கேட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், உண்மையைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பள்ளி நிர்வாகமும் கல்வித்துறையும் அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.