ஒற்றுமையை விரும்பும் தமிழரின் தெரிவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே! – வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு.

“ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்ணியாகும். அதற்குப் பலமான ஆணையை வழங்க வேண்டும்.” – என்று ஜனநாயகத் தமழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“போரின் பின்னரான சூழலில் தமிழ் மக்கள் ஒற்றுமையை மையப்படுத்தியே தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அந்தவகையில் தொடர்ச்சியாக ஜனநாயத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இந்தக் கூட்டணியில் குறைகள் நிறைகள் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் விருப்புக்கு அமைவாகவும், அவர்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காகவும் இணைந்து செயற்படும் முக்கியமானதொரு அரசியல் சக்தியாக இருக்கின்றமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயமாகும்.

எமது கூட்டைப் பலவீனப்படுத்துவதற்கு அண்மைய நாட்களில் எதிர்மறையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழ் மக்கள் யதார்த்தத்தை நன்கு அறிவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அந்தவகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவே இருக்கப்போகின்றது.

ஆகவே, தமிழ் மக்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பலப்படுத்துவதன் ஊடாகவே ஏகோபித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். அதற்காக வடக்கு, கிழக்கு பூராகவும் தமிழ் மக்கள் தங்கள் ஆணையை உயர்ந்த அளவில் வழங்க வேண்டியது தவிர்க்க முடியாதவொன்றாகின்றது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.