சத்தியலிங்கம் ஊழல் புரியவில்லை! சிவமோகனின் கூற்று பொய்யானது!! – வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. தெரிவிப்பு.

“வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலத்தில் அப்போதைய அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் எந்தவொரு ஊழல் குற்றத்தின் பெயரிலும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதனை மாகாண அவைத் தலைவர் என்ற வகையில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் அண்மையில் வவுனியாவில் வைத்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தொடர்பில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊழல் குற்றத்தின் பெயரில் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு சத்தியலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமற்றவை எனவும், அவரைச் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விசாரணைக்குழு பூரணமாக விடுவிப்பதாகவும் எழுத்தில் பரிந்துரைத்துள்ளனர். இதனை அந்த விசாரணை அறிக்கையில் எவரும் எப்போதும் பார்வையிட முடியும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக – தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் கிடைக்காமைக்காகப் பொய்யான குற்றச்சாட்டை மருத்துவர் சிவமோகன் முன்வைக்கின்றார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.