தீர்வு என்ன என்று வெளிப்படையாகக் கூறாத அநுரவிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது! – தமிழரசின் வேட்பாளர் இளங்கோவன் சுட்டிக்காட்டு.

“தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாகக் கூறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்பகுதியில் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், எல்லோரும் இலங்கை மக்கள் என்று ஒரு மாற்றத்துக்கான அலை காணப்படுகின்ற அதேநேரம் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம், கட்சிக்குள் குழப்பம் என நாம் பிரிந்து நிற்கின்றோம்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இளைஞர்கள் தற்போது கூறுகின்றார்கள் தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஓர் அரசியலைப் பேசுகின்றது, புதிய ஓர் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால், இடதுசாரி கட்சிகள் சமத்துவம் பேசுவது என்பது புதியதல்ல. அந்தச் சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாகப் பார்க்கின்ற விடயம் காணப்படுகின்றது.

அதிலிருந்து அவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் தமிழருடைய தீர்வு தொடர்பான தெளிவான விடயத்தை இதுவரையிலும் முன்வைக்கவில்லை. அவர்கள் அதை வெளிப்படையாகப் கூறுவதற்குப் பயப்படுகின்றார்கள். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.