சந்தேக நபரின் ஆணுறுப்பில் மிளகாய் நீரை ஊற்றிய பொலிஸ் அதிகாரிகளை கைவிட்ட சட்டமா அதிபர்

தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் ஆணுறுப்பில் மிளகாய் நீரை ஊற்றிய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் , தெல்தெனிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராக மாட்டார் என சட்டமா அதிபர் இன்று (14) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். .

இது மிகவும் பாரதூரமான சம்பவம் என்பதால், பிரதிவாதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜராகாமால் இருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் மாத்திரமே தாம் ஆஜராகியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான யசந்த கோதாகொட மற்றும் குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ருவன் சாந்த பிரியதர்ஷனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், பொலிஸ் மா அதிபர், தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேரது பெயர்களை மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தெல்தெனிய பொலிசாரால் தாம் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள மனுதாரர், இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையில் தெல்தெனிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் ருவன் சாந்த பிரியதர்சன தெரிவித்தார் .

இந்த மனு , விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இது மிகவும் பாரதூரமான சம்பவம் என்பதால், பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பாக மாத்திரமே தாம் வாதிடுவதாக தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதி மன்றம், , சட்டமா அதிபர் மற்றும் பிற எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், மனுவை டிசம்பர் 19ஆம் தேதி திரும்பப் அழைக்கவும் உத்தரவிட்டது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி திருமதி மனுஷிகா குரே மற்றும் சட்டத்தரணி மாதவ எரியகம ஆகியோருடன் சட்டத்தரணி சுரேன் டி. பெரேரா ஆகியோரும் , சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோனும் ஆஜரானார்கள்.

Leave A Reply

Your email address will not be published.