சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை; நேரத்துடன் வீடு செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழையால் சென்னையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விட (15) நாளை (16)அதிக கனமழை இருக்கும் என்றும், இடைவிடாமல் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வட தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. எனினும், சிறிது சிறிதாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம் என்பதால், இன்றைக்கு போலவே நாளையும் மிக கனமழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.