2009 இன் பின் தமிழ் மக்களின் ஆணையை தமிழ் அரசியல்வாதிகள் நிறைவேற்றவில்லை – ‘பசு’ சின்னத்தில் போட்டியிடும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேட்பாளர் தேவானந்த் குற்றச்சாட்டு.

“2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஓர் அரசியல் தீர்வை நோக்கியதான நகர்வுக்காக மக்கள் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால் ஆணையைப் பெற்ற அரசியலாளர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் தமிழ் தேசியப் பேரவை மற்றும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் கொள்கைகளின் வழி நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.”

இவ்வாறு 2024 நாடாளுமன்றத் தேர்தலிலே யாப்பாணம் மாவட்டத்தில் பசு சின்னத்தில் போட்டியிடும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சுயேச்சைக் குழு முதன்மை வேட்பாளர் கலாநிதி தேவானந்த் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் பரந்த எதிர்ப்புணர்வு இருப்பதைப் பார்க்க முடிகின்றது. போரால் முடிந்த பின்னர் தமிழ் மக்கள் தமது வாழ்க்கை மேம்பாடு, அரசியல் இருப்பு, சுயநிர்ணயம் என்பவை சார்ந்து ஒரு தீர்வு நோக்கிச் செல்லும் என்று பேரவாவோடு இருந்தார்கள். ஆனால், அவர்களின் பேரவா நிறைவேறும் திசையை நோக்கி எமது அரசியல் செல்லவில்லை. எனவேதான் ஒரு மாற்றம் தேவை என்று இன்று எண்ணுகின்றார்கள். தமது வாழ்வின் தேடலாக, தமது விரக்திக்கான வடிகாலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தைப் பார்க்கிறார்கள்.

இந்த அரசியல் சூழலையே தமிழர் சம உரிமை இயக்கம் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றது. எமது இயக்கம் தேர்தலுக்காக முளைத்த ஒரு கட்சி அல்ல. நீண்ட பயணத்தைக் கொண்ட இயக்கம். இப்போது தேர்தல் களத்தில் அது தன்னை முன்னிலைப்படுத்தியிருக்கின்றது.

2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஓர் அரசியல் தீர்வை நோக்கியதான நகர்வுக்காக மக்கள் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், ஆணையைப் பெற்ற அரசியலாளர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் அந்தப் பயணத்தில் தொடர்ச்சியாக இணைந்திருந்த பலர், முக்கியமாக தொழில்வல்லுநர்களான மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வியியலாளர்கள் எனப் பலர் இணைந்துதான் இன்று சமஉரிமை இயக்கத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ்த் தேசிய சக்தி என்கிற பின்புலத்தில் இருந்துதான் இந்த இயக்கம் இயங்குகின்றது.

பொருளாதார மேம்பாடு

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக தேசியத்தை நோக்கி நகர்தல் என்பது எமது முக்கிய குறிக்கோள். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இனியும் நலிந்து கிடக்காமல் பொருளாதாரத்தில் மேம்படவேண்டும். ஏனென்றால் எப்போதுமே ஓர் அடிப்படையான தேவை பூர்த்தி செய்யப்படும்போதுதான் அந்த மக்கள் அல்லது இனம் தமது விடுதலையைப் பற்றி முழுமையாகச் சிந்திக்க முடியும். உச்சமான சுயநிர்ணய உரிமைக்கான தேடலில் ஈடுபடமு-டியும். அதை நோக்கி நகர்வதுதான் எமது முதன்மைக் கொள்கை.

இப்போதைய அரசியல் சூழலில் மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னெடுப்பதற்கான எந்தவொரு கொள்கை முன்னெடுப்பும் செயற்றிட்டங்களும் பரந்தளவில் மேற்கொள்ளப்படவேயில்லை. அதற்குப் பதிலாகக் கிள்ளித் தெளிக்கும் நிலைதான் வலுப்பெற்றுள்ளது. சலுகை அரசியல்தான் இடம்பெறுகின்றது. இதனால் ஒரு சிலர் மட்டும்தான் நன்மை அடைகிறார்கள். அந்த நிலை மாறி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நன்மையடைய வேண்டும் என்பதுதான் எமது இலக்கு. இதற்கு மக்களிடம் அதிகாரம் இருக்கவேண்டும். அதை வலியுறுத்தித்தான் தமிழர் சமவுரிமை இயக்கம் இந்தத் தேர்தல் களத்திலே இறங்கியிருக்கின்றது.

கல்வி

ஒரு காலத்தில் கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருந்த நாம் இன்று பின்னடைந்து இருக்கின்றோம். அதிலிருந்து மீளவேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி என்பதே எமது இலக்கு. எல்லோரும் சம வாய்ப்பைப் பெறுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்க வேண்டி இருக்கின்றது. எமது கல்விப் பின்னடைவுக்கு அதில் உள்ள அரசியல் தலையீடு முக்கிய காரணம். தொடக்க நிலைக் கல்வியாக இருந்தாலும், பாடசாலைக் கல்வியாக இருந்தாலும், பல்கலைக்கழக கல்வியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் அரசியல் தலையீடு காணப்படுகின்றது.

அண்மைய தரவுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 87 பாடசாலைகள் யாழ். மாவட்டத்தில் மட்டும் மூடப்பட்டுள்ளன. அப்படிப் பாடசாலைகளை மூடுவதற்கான கல்விக் கொள்கையைத்தான் நாம் வைத்திருக்கின்றோம். கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி கல்வித் தேவைக்காகத் தினமும் பெற்றோர்கள் படையெடுக்கவேண்டியதாக இருக்கின்றது. அதற்காகவே அவர்கள் நிறையச் செலவிடுகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். கிராமத்தில் உள்ளவர்களுக்கும் நகரத்தில் உள்ளவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்கவேண்டும். அதனடிப்படையிலேயே தமிழர் தேசம் கட்டியெழுப்பப்படவேண்டும். அதுவே எமது இலக்கு.

மருத்துவத்துறை

ஆதார வைத்தியசாலைகள் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலுமே தரமான மருத்துவ சேவை வழங்கப்படவேண்டும். ஆதார வைத்தியசாலைகள் தரமான வள ஆளணிகளோடு இல்லை. அதைத் தரவேண்டிய மத்திய அரசு அதை வழங்கவில்லை. அரச இலவச வைத்தியத்துறையை தனியார் மயப்படுத்தும் நோக்கோடு கொழும்பு செயற்படக்கூடும். அதற்கு அனுமதிக்கக்கூடாது. நாம் அதை எதிர்ப்போம். தரமான மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபடுவோம்.

வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான போராட்டம்

வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து நிற்போம். கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை வலியுறுத்துவோம். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பாதுக்காகவும் முன்னிற்போம்.

பெண்களுக்கு சமஉரிமை வழங்குவது எமது அடிப்படைக் கொள்கை. எமது வேட்பாளர் பட்டியலிலேயே நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளில் எதிலும் எமது வேட்பாளர்கள் அளவுக்குப் பெண்கள் கிடையாது. மூத்த சட்டத்தரணிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தொழில்முனைவோர் என்று பல்துறை சார்ந்த பெண்களும் எமது தரப்பில் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கான உரிமைக்காகப் போராடுவதே எமது நோக்கம்.

பல கோடி ரூபாய் அரசியல்

அரசியலில் ஈடுபடுவதென்றால் பல கோடி ரூபா தேவை என்ற பேச்சு இருக்கின்றது. நாங்கள் அவ்வளவு பணம் செலவழிக்கக்கூடியவர்கள் இல்லை. அப்படிச் செலவழிப்பவர்களுக்கு அந்தப் பணம் எங்கிருந்த வருகிறது? செலவழித்த பணத்தை அவர்கள் அரசியலிருந்து எப்படித் திரும்பப் பெறுவார்கள், என்பதை மக்கள் சிந்திப்பார்களாயின் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிடும்.
நீங்கள் இன்று 5 ஆயிரம் ரூபாக்கு வாக்குகளை விற்றால் இன்னும் 5 வருடங்களுக்கு அவர்கள் உங்களைக் கவனிக்க மாட்டார்கள்.

மதுபான நிலைய உரிமம்

இலங்கையில் மதுப் பாவனையில் யாழ்ப்பாணம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. நுவரெலியா முதலாவது இடத்தில் இருக்கின்றது. இவை இரண்டுமே தமிழ்ப் பகுதிகள்.

இந்த மக்களை மது போதைக்குப் பழக்கப்படுத்துவதும் அடிமையாக்குவதும் திட்டமிடப்பட்ட செயற்பாடு. ஒரு இனத்தை அதுவும் தமது உரிமைக்காகப் போராடிய ஒரு இனத்தைச் சிதைப்பதற்காக மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடுதான் இந்த மதுவும் போதைப் பொருள்களும். இன்று இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். அதனால் மிக இளவயதிலேயே இறந்தும் போகிறார்கள். அதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் மதுபான விற்பனை நிலைய அனுமதியில் அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக தமிழ் மக்களைப் பாதிக்கும் ஒரு விடயம். அதை அதை அவர்கள் தவிர்த்திருக்கவேண்டும். மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலே தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள்தான் மது விற்பனை நிலையங்களுக்குப் பின்னாலும் இருக்கின்றார்கள் என்பது பெரும் அபத்தம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.