ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!

ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனிக்கு ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பஞ்சகுலாவின் ஹலிமார் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஹரியாணா சட்டப்பேரவையின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் கூட்டம், சண்டீகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஹரியாணாவில் முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி (54) பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் ஆளுநர் பண்டரு தத்தாத்ரேயாவை சந்தித்து மாநிலத்தில் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஹரியாணா முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

இதனைத்தொடர்ந்து, ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.