தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் இதனை கனிவுடன் பரிசீலித்து ஜூலை 1 முதல் மாநில அரசுப்பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து ஜூலை 1 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.