15 வருடங்களாக ஒரே தலைமையின் கீழ், ஒரே கொள்கையுடன்,ஊழலற்றுச் செயற்படுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே-சோமநாதன் பிரசாத்!

15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல்,கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது அகில இலங்கைத் தமிழ் காங்கிஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமேயென, அக்கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இன்று (22.10),செவ்வாய்க்கிழமை,காலை 11.00 மணியளவில்,தனியார் சுற்றுலா விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர், மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எந்த மாவட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் முன்னின்று செயற்படுபவர்கள் நாங்கள்.

நாங்கள் மற்ற அரசியல் வியாபாரிகளை போன்றவர்கள் அல்ல,மக்களுக்கு சேவை செய்வதே எங்களது முழு நோக்கமாக உள்ளது. எங்களுடைய கட்சி எந்த ஒரு சலுகைகளுக்காகவும் எப்போதும் விலை போனது கிடையாது.

“2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற ஒரே கட்சி நாங்கள் மாத்திரமே.”

“அற்ப சலுகைகளுக்காக நாங்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை மற்ற அரசியல் வியாபாரிகளைப் போலல்லாமல்,
மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகின்றவர்கள் நாங்கள் எங்கள் தலைமை அவ்வளவு உறுதியானது,எதிரிகளும் கூட நேசிக்கிற ஒரே ஒரு தலைமை எங்களுடைய தலைமை தான். கஜேந்திரகுமார். பொன்னம்பலம் என்றால் அனைவருக்கும் தெரியும்.”

“மக்கள் எதிர் நோக்குகிற இனப் பிரச்சினைகளுக்கு எப்போதும் முன்னின்று குரல் கொடுக்கிறவர்கள் நாங்கள். சட்டவிரோத காணி சுவீகரிப்புகள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரச்சினைகள்,சிங்கள குடியேற்றங்கள், இதுபோன்று தமிழ் மக்கள் எந்த பிரச்சினையை எதிர்கொண்டாலும். எங்களுடைய கட்சியே முன் நின்று. மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.“

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு பெட்டி பெட்டியாக காசு கொடுத்தார்கள், கார் கொடுத்தார்கள், பார் கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் எந்த அற்ப சலுகைக்கும் இடமளிக்காமல் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரித்தோம்.”

“2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசியத்தை விட்டுக் கொடுக்காத சுயநிர்ணயத்தை விட்டுக் கொடுக்காத, நண்பர்கள் உற்றார் உறவினர் அயலவர்கள் என்று பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவான வகையில் அரசியல் தீர்வினைப் பெற்றுத்தரக் கூடியவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

“கொஞ்சமும் கூச்சமில்லாமல் இதை தங்களுக்கானது என்று சில அரசியல் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

“தொடர்ந்து தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்தாலும்,மக்களை விட்டு நாங்கள் ஒருபோதும் விலகியதில்லை.”

“நம்பி வாக்களித்த மக்களை மற்ற அரசியல்வாதிகள் கைவிட்ட நிலையில் நாங்கள் மட்டுமே எப்போதும் மக்களின் அருகாமையில் இருக்கிறோம்.”

“இம்முறை எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்து எங்களைப் பாராளுமன்றம் அனுப்புங்கள். எங்களுடன் கைகோருங்கள் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். எங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர், துரைராஜா.ஜோன்சன், கட்சியின் மன்னார் மாவட்டச்,செயலாளர், அந்தோனி விக்ரர் தற்குரூஸ் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.