கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா?

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர். கூட்டணியில் மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் உள்ளக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அஜித் மானப்பெரும தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்துக்காகப் பிரசாரம் செய்த நடிகை தமிதா, தற்போது சஜித் தரப்பை விளாசித்தள்ளி வருகின்றார். நேற்று கட்சியும் தாவினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பதவி விலக முடிவெடுத்திருந்தாலும் அவரது பதவி விலகல் கடிதத்தை சஜித் ஏற்கவில்லை. ஹிருணிக்காவை தற்காலிகமாகச் சமரசப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, சஜித்தின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் சில உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கட்சியின் தலைமைப் பதவியை கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாஸ, ஹர்ஷ டி சில்வா ஆகிய இருவரும் இம்முறையும் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கடந்த முறை எதிரணி விருப்பு வாக்குப் பட்டியலில் சஜித் முதலிடம் பிடித்திருந்தாலும் இம்முறை ஹர்ஷ டி சில்வாவுக்கே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாததால் அவரை விரும்பக்கூடிய தரப்புகள், ஹர்ஷ டி சில்வாவையே ஆதரிக்கக்கூடும். விருப்பு வாக்குப் பட்டியலில் சஜித் பின்தள்ளப்பட்டு, ஹர்ஷ முதலிடம் பிடித்தால் அது சஜித்தின் தலைமைப் பதவிக்கும் ஆபத்தாக அமையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.