மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள்: முக்கிய புள்ளியிடம் சி.ஐ.டியினர் விசாரணை.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போனயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தமையை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 9 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 6 கப் வண்டிகள் மற்றும் 2 லொறிகள் இவ்வாறு காணாமல்போயுள்ளன.

2022 ஆம் ஆண்டு கணக்காய்வுத் திணைக்களத்தின் கணக்காய்வு அறிக்கையில் ஜனாதிபதி செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 800 இற்கும் அதிகமான வாகனங்களில் 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளமை தெரியவந்துள்ளது. சில முயற்சிகள் ஊடாக 22 வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், 29 வாகனங்களைக் கண்டறிய முடியவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் மகேஷ் ஹேவாவிதாரனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், காணாமல்போன வாகனங்களை மீட்பதற்கு உதவக்கூடிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அவர் மூலம் வெளிவரவில்லை எனத் தெரியவருகின்றது.

மகேஷ் ஹேவாவிதாரன பதவியைப் பொறுப்பேற்றதிலிருந்து முறையான பதிவுகளைப் பேணி வந்தார் எனவும், ஆனால் பழைய கோப்புகள் காணாமல்போயுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சாட்சியமளித்துள்ளார் எனவும், காணாமல்போன ஆவணங்களைக் கண்டுபிடிக்க மூன்று வார கால அவகாசத்தை அவர் கோரியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.