யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் குறித்து கலந்துரையாடல்.

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ். பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்துக்கும், ஏனைய இடங்களுக்கும் அனுப்பிவைத்தல் மற்றும் வெளி மாவட்ட உற்பத்திப் பொருட்களை யாழ். பொருளாதார மத்திய நிலையத்துக்கு எடுத்து வந்து சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர், அடுத்த கூட்டத்தில் இதனுடன் தொடர்புடைய வணிகர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினர், நிபுணர்கள் மற்றும் உருளைக்கிழங்கு , வெங்காயம், வாழைக்குலை போன்ற விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளா், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர், வர்த்தகப் பிரதிநிதிகள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைக் குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் மற்றும் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.