ஜோன்ஸ்டன் சட்டவிரோதமாக பயன்படுத்திய BMW வாகனம் இங்கிலாந்தில் திருடிக் கொண்டு வரப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சர்வதேச தரவு அமைப்பு மூலம் காரின் வரிசை எண்ணை சரிபார்த்தபோது, ​​இந்த கார் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனம், திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும்,வாகனம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லையெனவும்,சுங்க தரவு அமைப்பு மூலம் தெரியவந்ததாகவும்,விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும், தனது கட்சிக்காரர் திருடினார் என்று கூறுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், சட்டத்தின் கீழ் அவர்மீது திருட்டுக் குற்றம் சாட்ட முடியாது என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.