165 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் சிக்கினர்!

கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 165 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 165 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்குப் பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 165 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 – 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.