பிரிட்டனில் 10 வயது மகள் கொலை : தந்தை, மாற்றாந்தாய் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பிரிட்டனில் 10 வயதுச் சிறுமியின் மரணத்திற்குத் தந்தையும் மாற்றந்தாயும் காரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
42 வயதுத் தந்தை உர்பான் ஷரிப், 30 வயது மாற்றந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகிய இருவரும் சிறுமியைக் கொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
29 வயது மாமா பைசல் மாலிக் சிறுமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் அல்லது கொலை நடப்பதை அனுமதித்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை விதிக்கப்படும்.
சென்ற ஆண்டு (2023) 10 வயது சாரா ஷரிப் (Sara Sharif) லண்டனில் உள்ள அவரின் வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
அவரின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூவரும் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிவிட்டனர்.
ஒரு மாதம் கழித்து மூவரும் பிரிட்டனுக்குத் திரும்பிய பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தந்தை ஷரிப் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
சாரா உடலில் சுமார் 25 எலும்புகள் உடைந்திருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிந்தது.
சிறுமியின் மீது 100க்கும் அதிகமான காயங்களும் இருந்தன.
அந்தச் சம்பவம் பிரிட்டனை உலுக்கிப் போட்டது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.