கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி!

உத்தரப் பிரதேசம் : மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், இன்று (ஜனவரி 29, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டமாக தகவல்கள் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தை அமாவாசை என்பதால், அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட சங்கமம் பகுதியில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக புனித நீராடலுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சம்பவம் குறித்து பேசினார்.உரையாடலின் போது, பிரதமர் மோடி தற்போதைய நிலவரங்களை மதிப்பாய்வு செய்து, கும்பத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உடனடி ஆதரவு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மகா கும்பமேளா (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) நான்கு முக்கிய நகரங்களில் (பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்வார், நாசிக்) ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்த விழாவில், முதல் 15 நாட்களில் 15 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.