இந்தியாவால் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு.
இந்தியாவின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வரவு செலவு திட்டம் தாக்கல்
நேற்றைய தினம் (2025-2026) ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8ஆவது வரவு செலவு திட்டமாக இதனை முன்வைத்தார்.
வெளிநாட்டு உதவிகளுக்கான ஒதுக்கீடு
இந்திய வெளியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை நாடுகளுக்கான உதவித்தொகை நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.
இலங்கைக்கு அதிகரிக்கப்பட்ட நிதி
இந்தியாவின் புதிய வரவு செலவு திட்டத்தின் கீழ் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் (சுமார் 1,032 கோடி இலங்கை ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருவதால், கடந்த ஆண்டு 245 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீடு, இம்முறை 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பூடானுக்கான அதிகபட்ச நிதி
இந்திய வரவு செலவு திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பூடானுக்கு அதிகபட்சமாக 2,150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.