இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று…
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
இங்கிலாந்து அணி தனது கடைசி இரு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசிடம் கோப்பை இழந்த சோகத்தில் உள்ளது. சமீபத்திய ‘டி-20’ தொடரில் ஏமாற்றிய இங்கிலாந்து அணியில் கூடுதலாக ஜோ ரூட் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது வருகை ‘மிடில் ஆர்டரில்’ பேட்டிங்கை பலப்படுத்தலாம்.
கேப்டன் பட்லர், டக்கெட், ஹாரி புரூக், பில் சால்ட் உள்ளிட்டோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். பவுலிங்கில் ஆர்ச்சர், மார்க் உட், ஓவர்டன், சாகிப் மக்மூத் உள்ளனர். சுழலில் அடில் ரஷித்துடன் லிவிங்ஸ்டன் இணைய உள்ளார். ஒருநாள் அரங்கில் இரு அணிகள் மோதிய 107 போட்டியில் இந்தியா 58, இங்கிலாந்து 44ல் வென்றன. 2 போட்டி ‘டை’ ஆனது (முடிவில்லை 3).
இந்திய அணி கேப்டன் ரோகித், துணைக்கேப்டன் சுப்மன் கில் துவக்கம் தர காத்திருக்கின்றனர். ‘மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா வரவுள்ளனர். ஐந்தாவது இடம் விக்கெட் கீப்பருக்கு தரப்படும்.
இதில் 2023 உலக கோப்பை தொடரில் 452 ரன் குவித்து அணிக்கு கைகொடுத்த ராகுல், வாய்ப்பு பெறலாம். அதேநேரம் ராகுல் பந்துகளை வீணடிக்கிறார். இடது கை பேட்டராக உள்ள ரிஷாப் பன்டும் விக்கெட் கீப்பர் போட்டியில் உள்ளார். அணியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக ரிஷாப் இருப்பார் என நம்பப்படுவதால், ராகுலுடன் சேர்ந்து அணியில் களமிறங்கலாம். இதனால், ஸ்ரேயாஸ் தனது இடத்தை விட்டுத்தர நேரிடும்.