குப்பையை வீசியவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த வித்தியாசமான தண்டனை.
ஹட்டன் நகரில் உள்ள மீன் கடையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை பழைய ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கால்வாயில் கொட்டிய லொரி டிரைவரும், உதவியாளரும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால் (05) கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், இரண்டு குற்றவாளிகளையும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மேலும், ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில், குற்றவாளிகள் கழிவுகளை கொட்டிய இடத்தை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஹட்டன் நீதவான் எம். ஃபரூக் டின் உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் கழிவுகளை ஏற்றிச் சென்ற லொரியை பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் (05) அன்று ஹட்டன் நகரில் நடைபெற்றபோது, குற்றவாளிகள் இருவரும் லொரியில் இருந்து மீன் கழிவுகளை எடுத்துச் சென்று பழைய ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் கொட்டிக் கொண்டிருந்தபோது வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் அதைக் கண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஹட்டன்-டிக்கோயா நகர சபை எல்லைக்குள் இது போன்ற கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுபவர்களையும், வெற்றிலை துப்புபவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஹட்டன் பிரிவு பொறுப்பு பொலிஸ் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.