தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பு.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்து ஆவணங்கள் 11,344 புடவைகள் 750 காலணிகள் 91 கைக்கடிகாரங்கள் ஒப்படைப்பு!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்துக்களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொலிஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்த பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தார்.
மேலும், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகாவுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
வழக்கு நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கர்நாடக அரசுக்கு வழக்கை நடத்திய தொகை வழங்கப்படவில்லை.
எனவே, பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடந்த 2023-ல் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.ஏ.மோகன், “கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள நகைகள், புடவைகள், சொத்துக்களின் ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தீபா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவையும் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
கர்நாடக கருவூலத்தில் இருந்து தங்கம், வெள்ளி, வைரநகைகள், சொத்துகளின் ஆவணங்கள் அடங்கிய 6 பெட்டிகள் கொண்டுவரப்பட்டன. அதனை தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா ஆகியோர் தலைமையிலான மதிப்பீட்டு குழு ஆவணங்களில் உள்ளவாறு சரிபார்த்து, மதிப்பீடு செய்து பெற்றுகொண்டனர். பின்னர் அந்த நகைகள் அனைத்தும் புகைப்படம், வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக 1,562 ஏக்கர் மதிப்பிலான நிலத்தின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சொத்துப் பட்டியலில் இருந்த 468 தங்க, வைர நகைகள், ரத்தின கற்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் வரிசை எண் 155 வரையிலான நகைகள் நேற்று சரிபார்க்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.
மொத்தம் 27 கிலோ எடையுள்ள நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
எஞ்சியுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சால்வைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இன்று தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.