அமெரிக்க துணை அதிபர் வான்சை தாக்கிப் பேசிய ஜெர்மன் பிரதமர்.

வெறுப்புப் பேச்சு, தீவிர வலதுசாரி தத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டை ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) தற்காத்துப் பேசியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14ஆம் தேதி) மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபர் வான்சை அவர் சாடினார். ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று மற்றவர்கள் கூறுவது முறையாகாது என காட்டமாக திரு வான்சுக்கு அவர் பதிலளித்தார்.

முன்னதாக, ஜெர்மனியின் முக்கிய கட்சிகள் பேச்சுரிமைக்குத் தடைவிதிப்பதாகக் கூறிய அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், ஜெர்மனியின் தீவிர வலதுசாரிப் பிரிவினருக்கு எதிராக அவை தடைகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

“ஜெர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியுடன் நாங்கள் இணைந்து பணியாற்றாததற்கு தகுந்த காரணங்கள் உள்ளன. அதனுடன் ஒத்துழைக்கும்படி மற்றவர்கள் ஆலோசனை கூற முடியாது,” என்று ஷோல்ஸ் அதே பாதுகாப்பு மாநாட்டில் பதிலளித்தார்.

“அது, நண்பர்கள், நட்பு நாடுகளுக்கு இடையே, முறையாகாது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்,” என்று திரு ஷோல்ஸ் தெரிவித்தார்.

ஜெர்மனியில் குடிநுழைவுக்கு எதிரான ‘ஏஎஃப்டி’ என்ற தீவிர வலதுசாரிக் கட்சிக்கு மக்களிடையே ஏறத்தாழ 20 விழுக்காடு ஆதரவு உள்ளது. அந்நாட்டில் ஹிட்லரின் நாட்ஸி காலத்து கொடுங்கோல் ஆட்சி முறை காரணமாக ‘ஏஎஃப்டி’ கட்சியை மற்ற முக்கிய கட்சிகள் தீண்டத்தகாத கட்சியாக நடத்துகின்றன.

“ஃபாசிச ஆட்சி முறைக்கு இனி இடமில்லை, இன வெறுப்புணர்வுக்கு இனி இடமில்லை, ஆக்கிரமிப்புப் போருக்கு இனி இடமில்லை,” என்று ஹிட்லரின் நாட்ஸி காலத்து சித்தாந்தத்தை நினைவுகூர்ந்து, அதை நிராகரித்து ஷோல்ஸ் உரையாற்றினார்.

ஐரோப்பிய நாடுகள் வெறுப்புணர்வுப் பேச்சுக்கு தடைவிதிப்பதை குறைகூறிய திரு வான்சைக் குறிப்பிட்டுப் பேசிய ஷோல்ஸ், “தீவிரவாத ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திகளால் ஜனநாயக நாடுகள் அழிந்துவிடக்கூடும். இதை ஐரோப்பிய நாடுகள் தெளிவாக உணர்ந்துள்ளன,” என்று வான்சின் விமர்சனத்துக்கு ஷோல்ஸ் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.