இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு ஈக்களை அனுப்ப திட்டம்

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் ஈக்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வு தொடர்பான சோதனைகளில் பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை உலகின் முதல் நாடாக நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து, 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு தனி விண்வெளி மையம், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்ற பல்வேறு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் 2 ஆள் இல்லாத ராக்கெட் மூலம் சோதனை செய்த பின்னர், 3வது ராக்கெட் மூலம் மனிதர்களை அழைத்து சென்று மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதே ‘ககன்யான்’ திட்டமாகும்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 3 இந்திய விண்வெளி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு முதல் ஆளில்லா சோதனை ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ராக்கெட் மூலம் டிரோசோபிலா மெலனோகாஸ்டர் என்ற வகை ஈக்களையும் விண்ணில் அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஈக்கள் செல்லும் காரணம்
ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும். ஈக்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழு விண்வெளியில் செலுத்தப்படும். மற்றொன்று இரண்டுக்கும் இடையிலான பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள ஈக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். விண்வெளி பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது, ராக்கெட் பயணத்தின் போது அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றன என்பதை ஆய்வு செய்ய ஈக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த ஈக்கள் மனிதனுக்கான மரபணுவை சுமார் 75 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் அவற்றின் உயிரியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது.

Leave A Reply

Your email address will not be published.