துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு.

மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் நேற்று செவ்வாய்க்கிழமை (18.02) கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த (28.01) எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், காயம் அடைந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரவும், கைது செய்யப்பட்டுள்ள பிற மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையில் திருப்தியில்லையெனக் கூறியும் காரைக்கால் மீனவர்கள் கடந்த 11ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம், மோட்டார் சைக்கிள்களில் கண்டன ஊர்வலம், ரயில் மறியல் போன்ற போராட்டங்களையும் நடத்தினர்.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பிற பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. எனினும், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளும் வாகனப் போக்குவரத்துகளும் வழக்கம்போல இயங்கின.