தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா இன்று(பிப்.26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நேற்று அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை தனது காதில் வைத்து செல்ஃபோனில் பேசுவது போல சைகை காட்டிவிட்டு விஜய்யின் வீட்டிற்குள் வீசினார்.
இந்தச் சம்பவத்துக்கான விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், செருப்பை வீசி நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, விஜய் மீது முட்டை வீசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்தக் காலணி வீச்சு சம்பவமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.