(Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு மாற்றாக டீம்ஸ் (teams) செயலியை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப் காணொளி அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant Messaging), கோப்பு பகிர்வு மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான அழைப்புக்கள் போன்ற வசதிகளை வழங்கியது.
2011ஆம் ஆண்டு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஸ்கைப் சேவையைக் கொள்வனவு செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட மைக்ரோசொஃப்ட் அறிக்கையின் படி, நாளொன்றுக்கு 36 மில்லியன் பயனர்கள் ஸ்கைப் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மைக்ரோசொஃப்ட், தனது டீம்ஸ் (Teams) செயலியை அதிக முன்னிலையில் கொண்டு வந்து குழு சந்திப்புகள், கோப்பு பகிர்வு, அலுவலக பணிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையமாக உருவாக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டீம்ஸ் (Teams) செயலியை, மாதம் 320 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் டீம்ஸ் (Teams) பயனர்கள் ஸ்கைப் பயனர்களுடன் உரையாடவும், அழைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டது.
இதேவேளை ஸ்கைப் சேவை 2025 ஆம் ஆண்டு மே மாதம் 5 திகதி முதல் பயன்படுத்த முடியாது எனவும், அதற்குப் பதிலாக டீம்ஸ் (Teams) செயலியை பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.